தஞ்சாவூர், மே 16 –
அனைத்து வெடி பொருள்கள் உற்பத்தி நிலையங்களில் 7 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அனைத்து வெடிபொருள்கள் உற்பத்தி நிலையங்களில் வெடி தயாரிப்புக்கான மூலப் பொருட்களை கலந்து உடனடியாக வெடியாக மாற்றி விட வேண்டும். வெடி பொருளுக்கான கலவையை இருப்பில் வைத்திருக்கக் கூடாது.
அனைத்து வெடிபொருள்கள் உற்பத்தி நிலையங்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவிலான மூலப்பொருட்களை மட்டுமே சேமித்து வைக்க வேண்டும். மூலப் பொருள்களின் இருப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சரக வருவாய் ஆய்வாளர்களால் வாரம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்.
அனைத்து வெடிபொருள்கள் உற்பத்தி நிலையங்களிலும் தாசில்தாரால் வாரம் ஒரு முறையும், வருவாய் கோட்ட அலுவலரால் 15 நாட்களுக்கு ஒரு முறையும் கண்காணிக்கப்பட வேண்டும். ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையினரால் உடனடியாக மாவட்ட வருவாய் அலுவலருக்கு அறிக்கை அனுப்பப்பட வேண்டும்.
அதே நேரத்தில் விதிமுறைகளை கடைபிடிக்காத வெடி உற்பத்தி நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த நடவடிக்கையையும் கடுமையாக தடுக்கப்பட வேண்டும். உரிமம் பெற்ற வளாகத்தில் தீயணைப்பான், தண்ணீர் மற்றும் மணல் வாளிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அனைத்து வெடிபொருள்கள் உற்பத்தி நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் 7 நாட்களுக்குள் பொருத்தப்பட வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.



