தேனி, ஜூன் 04 –
தேனி மாவட்டம், சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்த மாணவிகளுக்கு, பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து சிறப்புப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினர்.
இப்பள்ளியில் பயிலும் மாணவிகளில் முதல் பரிசு – மாணவி ஜீவதர்ஷினி, இரண்டாம் பரிசு – மாணவி பரணி, மூன்றாம் பரிசு – மாணவி தாட்சாயினி ஆகியோர் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் மூன்றாம் இடம் பிடித்த மாணவி தாட்சாயினி, ‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சியின் தேனி மாவட்ட ஒளிப்பதிவாளரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஆசிரியர்கள் நேரில் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தியது, பள்ளியின் மற்ற மாணவ மாணவிகளுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகவும், உத்வேகமாகவும் அமைந்தது. பரிசுகளைப் பெற்றுக் கொண்ட மூன்று மாணவிகளும், “இனிவரும் காலங்களில் இன்னும் தீவிரமாகப் படித்து, மாநில அளவில் முதலிடம் பிடித்து பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்போம்” என்று ஆசிரியர்களிடம் நெகிழ்ச்சியுடன் உறுதி கூறினர்.
சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியானது, கல்வி மட்டுமின்றி தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ஏராளமான பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று, பல்வேறு சிறப்புப் பரிசுகளையும் பாராட்டுகளையும் தொடர்ந்து பெற்று சாதனைப் பட்டியலை நீட்டித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



