மார்த்தாண்டம், ஜூலை 11 –
அருமனை அருகே உள்ள படப்பச்சையில் இருந்து திற்பரப்பு செல்லும் சாலை உள்ளது. இங்கு நேற்று மாலை சாலையோரம் 3 வாலிபர்கள் மற்றும் ஒரு இளம் பெண் மது போதையில் தள்ளாடியபடி தரையில் விழுந்து கிடந்தனர். அவர்கள் அருகே ஒரு பைக் நின்றது. இதில் இரண்டு வாலிபர்களுக்கு காயங்கள் இருந்தது. இளம்பெண் அதீத மது போதையில் சாலையில் விழுந்து கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அந்த பெண்ணை மீட்க முயன்றனர். ஆனால் வாலிபர்கள் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் பேசி நெருங்க விடாமல் தடுத்தனர்.
அப்போது அந்த வழியாக கடையாலுமூடு காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு பிரேமலதா என்பவர் பைக்கில் சென்றுள்ளார். போலீசை கண்டதும் வாலிபர் ஒருவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இளம்பெண், இரண்டு வாலிபர்கள் போதையில் கிடந்தனர். ஏட்டு பிரேமலதா அருகில் சென்றபோது அந்த வாலிபர்கள் பெண் போலீசை மீட்க விடாமல் தடுத்துள்ளனர். மேலும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க கூடாது என மிரட்டி உள்ளனர். உடனடியாக ஏட்டு பிரேமலதா இது குறித்து போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணையும், வாலிபர்களையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒரு வாலிபர் மற்றும் இளம்பெண் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வாலிபர்கள் அருமனை பகுதியை சேர்ந்த ஜீனோ, தென்காசி பகுதியை சேர்ந்த பிரசாந்த் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த இளம்பெண் என்பது தெரிய வந்தது. இவர்கள் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், அங்கிருந்து திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்ததாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 5ம் தேதி திற்பரப்புக்கு வந்துள்ளனர். இதற்கு இடையில் மதுபோதையில் இந்த சாலையோரம் கடந்த இந்த சம்பவம் நடத்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இளம்பெண்ணை பாதுகாத்த எட்டு பிரேமலதாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



