நாகர்கோவில், ஜன. 3 –
நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு தினமும் அந்தியோதயா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கம்போல் நேற்று மாலை நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.
ஆரல்வாய்மொழி அருகே ரெயில் வந்து கொண்டிருந்தபோது மர்மநபர்கள் திடீரென்று ரெயில் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் ஜன்னல் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ரீனா அன்னமேரி மீது கண்ணாடி துண்டுகள் விழுந்து காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாலை 5 மணி அளவில் நெல்லை சந்திப்பில் ரெயில் வந்ததும் ரீனா அன்னமேரிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் சென்னைக்கு முக்கிய நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதால் அங்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதாக கூறி பயணத்தை தொடர்வதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தோவாளை, ஆரல்வாய்மொழி, காவல்கிணறு ரயில் நிலையங்களில் மாலையிலிருந்து நள்ளிரவு வரை சோதனை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த கூறப்படும் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. எனவே ஏதாவது தடயம் கிடைக்குமா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.



