ஈரோடு, ஏப். 27 –
தமிழ் இலக்கியக் களம் சார்பில் சிங்கப்பூர் தேசிய நூலக அரங்கில் பாரதிதாசன் விழா நடைபெற்றது. பாவேந்தர் கண்ட கனவு என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: பாரதிதாசன் கண்ட பல கனவுகள் கடைசி வரை நிறைவேறவில்லை. அறிவியல் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டிருந்த பாரதிதாசன் விமானத்தில் ஏறி பயணம் செய்ய வேண்டுமென்று மிகவும் ஆசைப்பட்டிருந்தார். வெளிநாடுகளுக்குச் சென்று அந்நாட்டின் வளர்ச்சியைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். ‘பாண்டியன் பரிசு என்ற தனது காப்பியத்தையும் மகாகவி பாரதியின் வாழ்க்கை வரலாற்றையும் திரைப்படமாக்கி விட வேண்டும் என்ற பெரு முயற்சிகளை மேற்கொண்டார். பாரதிதாசனின் இத்தனை கனவுகளுமே கடைசிவரை நிறைவேறாமலேயே போய்விட்டது.
பாண்டியன் பரிசு திரைப்படத்தை சிறப்பாக எடுத்து வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் தான் சென்னையில் உலகத்தரம் மிக்க நூலகம் ஒன்றை ஏற்படுத்தப் போவதாகவும் அந்நூலகத்தில் உலக அளவில் தலைசிறந்த அறிவார்ந்த நூல்கள் அத்தனையும் இடம்பெற வேண்டுமென்றும் உலகில் வெளிவந்துள்ள சிறந்த நூல்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டுமென்றும் கருத்துத் தெரிவித்தார் பாரதிதாசன்.
பாரதிதாசன் தமிழ், தமிழர் என்று மட்டும் அல்லாமல் விரிந்த உலகப் பார்வையோடு ஏராளமான கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 57 நாடகங்களையும் 11 காப்பியங்களையும் எழுதியுள்ள பாரதிதான் ஒரு தலைசிறந்த கவிஞர் என்பதோடு பன்முகத் தமிழ் ஆளுமையாக விளங்கியவர் போரில்லா உலகை உருவாக்க வேண்டுமென்பதில் மிகவும் உறுதியாக இருந்தவர் பாவேந்தர் மனித நேயம். மானுட ஆற்றல். சகோதரத்துவம், சமத்துவம் உள்ளிட்டவை அவரின் அடிப்படைக் கொள்கைகளாக இருந்துள்ளன.
அடுத்த தலைமுறையினர் தமிழ் மொழியை ஆழ்ந்து கற்க வேண்டும். தமிழை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை சுவைத்துப் படிக்கிற பழக்கம் இளைஞர்களிடையே மேலோங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் அமைப்பின் தலைவர் முனைவர் ரத்தின வேங்கடேசன் தலைமையேற்றார். சிங்கப்பூர் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பட்டது.



