களியக்காவிளை, ஜூலை 10 –
தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சோதனை சாவடி அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலம் செல்லும் வாகனங்கள் மற்றும் அங்கிருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களில் ஆவணங்களை சரி பார்க்கும் முக்கிய மையமாக இந்த சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது.
இங்கு வாகனங்களுக்கான முறையான அனுமதி சீட்டுகள் மற்றும் வரி ஆவணங்கள் சரியாக உள்ளனவா? என்பதை உறுதி செய்வது இந்த சாவடியின் முக்கிய பணியாகும். இதுபோன்று கடத்தல் வாகனங்கள் மற்றும் கடத்தல் பெருட்களும் அதிகாரிகள் உத்தரவின் பேரில் சோதனை செய்வது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரமா தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனை சாவடிக்கு அதிரடியாக வருகை தந்து சோதனை மேற்கொண்டனர். அவர்கள் அலுவலகத்திற்கு இருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை தீவிர விசாரணை நடத்தினர். அலுவலகத்தில் இருந்த அனைத்து பதிவேடுகளையும் கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். குறிப்பாக தினமும் எத்தனை வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்படுகின்றன? அதற்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் முறையாக அரசுக்கு செலுத்தப்படுகின்றனவா? அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது.
மேலும் கடந்த காலங்களில் இங்கு முறைகேடுகள் நடந்ததாக வந்த புகார் குறித்தும் ஊழியர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் ரூபாய் 3,500 பதிமுதல் செய்யப்பட்டது. காலை 10 மணி முதல் 12 மணி வரை 2 மணி நேரம் சோதனை நடைபெற்றது. மேலும் சில முக்கியமான ஆவணங்களை கைப்பற்றியுள்ள ரஞ்ச ஒழிப்பு போலீசார் அவற்றின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை தொடங்கியுள்ளனர். காலை வேளையில் அரசு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அதிரடி சோதனை களியக்காவிளை எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



