நாகர்கோவில், ஏப். 17 –
நாகர்கோவிலில் கடந்த 15ம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேப்பமூடு சந்திப்பு முதல் வடசேரி அண்ணா சிலை சந்திப்பு வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ தேசிய செயற்குழு உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சி நடைபெற்ற பகுதி மட்டுமின்றி நாகர்கோவில் மாநகர் முழுவதும் பாரதிய ஜனதா, அதிமுகவினர் கொடிகட்டி இருந்தனர். இதில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் உள்ள ரவுண்டானாவை சுற்றியும் பாரதிய ஜனதா, அதிமுக கொடிகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பகுதியில் ஏற்கனவே அரசியல் கட்சி சம்பந்தமான கொடிகள், பேனர்கள் வைக்க கூடாது என தடை உள்ளது.
இந்த நிலையில் தடையை மீறி பாரதிய ஜனதா மற்றும் அதிமுகவினர் செயல்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நேசமணி நகர் சப்-இன்ஸ்பெக்டர் கீதா அளித்த புகாரின் பேரில் தேர்தல் விதிமுறை மீறி அதிமுக, பாரதிய ஜனதா கட்சியினர் கலெக்டர் அலுவலகம் வெளியே கொடி கட்டியதாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


