தஞ்சாவூர், ஜூன் 25 –
தஞ்சாவூரில் ரூபாய் 12 கோடியில் தாசில்தார் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் ரேவதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ரூபாய் 5 கோடியே 98 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், ரூபாய் 6 கோடியே 5 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் தஞ்சாவூர் தாசில்தார் அலுவலகம் கட்டுமான பணி நடைபெறுவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் தஞ்சாவூர்ஊராட்சி ஒன்றியம் நாஞ்சிக்கோட்டை ஊராட்சியை ஊருக்கு ஒரு வனம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் ,ரூபாய் 18 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் நாஞ்சிக் கோட்டை ஊராட்சியில் விக்டோரியா நகரில் புதிதாக போடப்பட்டுள்ள சாலையின் தரம் குறித்து நேரில் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் ஊராட்சி மானோ ஜிபட்டி அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளியில் மாணவர் களுக்கு வழங்கப்படும் உணவு, வகுப்பறை கட்டிடம், மாணவர்களின் கல்வித் திறன் குறித்தும், செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராமநாதபுரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பொது விநியோக கட்டிடத்தின் தன்மை குறித்தும் மனோஜிப் பட்டி நியாய விலை கடையில் பொருள் களின் இருப்பு, தரம், எடையின் அளவு குறித்தும் மணக்கரம்பை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோப்புகள் பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர் மணக்கரம்பை அரசு ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளையும், சத்திர நிர்வாகம் சார்பில் திருவையாறு அரசர் கல்லூரியின் புனரமைப்பு கட்டுமான பணிகளையும், திருவையாறு தாலுக்கா வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தையும் கலெக்டர் பார்வையிட்டார். இந்த பணிகள் விரைவாகவும், தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், தாசில்தார்கள் சிவகுமார் (தஞ்சாவூர்), முருககுமார் (திருவையாறு), சக்திவேல் (சத்திரம் நிர்வாகம்), வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



