கோவை, மே 6 –
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளில் 6 இடங்களை கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. இதுவரை அதிமுகவின் வலுவான கோட்டையாகக் கருதப்பட்ட கோவை மண்டலத்தில், இந்த முறை தவெக முன்னிலை பெற்று தனது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
கடந்த தேர்தலில் கோவை மாவட்டத்தின் அனைத்து 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியிருந்தது. இந்த முறை அந்த நிலையைத் தக்க வைக்க அதிமுகவும், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க திமுகவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.
ஆனால், மாற்று அரசியல், ஊழல் எதிர்ப்பு மற்றும் வளர்ச்சி வாக்குறுதிகளை முன்னிறுத்திய தவெக பிரச்சாரம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தேர்தல் முடிவுகளின்படி, சிங்காநல்லூர், சூலூர், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு மற்றும் கோவை வடக்கு ஆகிய 6 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.
திமுக சார்பில் பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் கோவை தெற்கு ஆகிய 3 தொகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக, அக்கட்சி தொண்டா முத்தூர் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. கோவை மண்டலத்தில் பல இடங்களில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக, கோவையிலும் தனது அரசியல் பலத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மக்கள் அளித்துள்ள இந்த ஆதரவை தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி மாவட்ட வளர்ச்சிக்காக புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



