புதுக்கடை, ஜூன் 11 –
புதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் இருதயதாசன் (80). இவர் நேற்று இனயம் புத்தன்துறை புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள பஸ் நிறுத்தத்திலிருந்து பஸ்ஸில் ஏறி உள்ளார்.
பஸ்ஸில் ஏறும் போது ஓட்டுநர் பஸ்ஸை கவனக்குறைவாக வேகமாக இயக்கியதில் இருதயதாசன் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து இருதயதாசன் மகள் றினி தாஸ் என்பவர் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பஸ் ஓட்டுனர் பைஜு, கண்டக்டர் தினேஷ் குமார் ஆகியோர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


