சுசீந்திரம், டிச. 05 –
சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அபிநயா மற்றும் கார்த்திகா ஆகியோர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ‘சுசீந்திரம் பழையாறு ஓர் ஆய்வு’ என்ற அறிவியல் ஆய்வு திட்டத்தை விளக்குவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற தென் மண்டல அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தென் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த குழந்தைகள் பங்கேற்று தங்களது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தனர்.
இதில் சுசீந்திரம் எஸ் எம் எஸ் எம் பள்ளி குழந்தைகளுடைய ஆய்வு தேர்வு செய்யப்பட்டு
டிசம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ள மாநில அளவிலான குழந்தைகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
சுசீந்திரம் பழையாறு ஓர் ஆய்வு என்னும் ஆய்வை செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்களில் கள ஆய்வு மூலம் பல்வேறு தரவுகளை திரட்டி ஆய்வு கட்டுரை தயாரித்திருந்தனர். பழைய ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசுகள் குறித்து சுசீந்திரம் பேரூராட்சி அலுவலரிடம் மனு அளித்து ஆற்றின் தூய்மையை பாதுகாக்க வலியுறுத்தினர்.
பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் அவர்கள் அனுமதியின் பேரில் ஆசிரியர் சிவஸ்ரீ ரமேஷ்
இந்த ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்து குழந்தைகளுக்கு பயிற்சி அளித்துள்ளார். மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள குழந்தைகளையும் வழிகாட்டி ஆசிரியரையும் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகம், ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.



