திருப்பூர், மே 12 –
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 232 பள்ளிகளில் உள்ள 1412 பள்ளி பேருந்துகள், பள்ளி வேன்களில் உள்ள முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி, அவசரகால கதவு (Emergency Exit) மற்றும் வேகக் கட்டுப்பாட்டு கருவி ஆகியவை சரியாக உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூரில் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கேயம், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 232 பள்ளிகளில் உள்ள 1412 பள்ளி பேருந்துகள், பள்ளி வாகனங்கள் அவசர வழி கதவுகள், முதலுதவி சிகிச்சை பெட்டிகள், பிரேக், டயர்கள், ஜன்னல்கம்பிகள் மற்றும் படிக்கட்டுகளின் உயரம் ஆகியவை விதிகளின்படி இருக்கின்றதா எனவும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உள்ளனவா எனவும் பள்ளி வாகனங்களுக்குள் சென்று மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே,
வடக்கு வட்டார அலுவலர் பொறுப்பு பாஸ்கர், தெற்கு வட்டார அலுவலர் முழு கூடுதல் பொறுப்பு ப.பழனியப்பன் உதவி வட்டார அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சிறிய குறைபாடுகள் உள்ள 10 பள்ளி வாகனங்கள் குறைபாடுகளை சரி செய்த பின்னர் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அனைத்து வாகன ஓட்டுநர்கள் முன்பு பேசிய ஆட்சியர் மணிஸ் நாரணவரே வாகன ஓட்டுனர்கள் அனைவரும் கண் பரிசோதனை செய்து கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கி வலியுறுத்தினார். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளை சேர்ந்த பள்ளி வாகனங்கள் பங்கேற்றன.



