கன்னியாகுமரி, செப். 1 –
ஶ்ரீ சத்திய சாய்பாபா சேவா நிறுவனம் சார்பில் ஸ்ரீ சத்திய சாய்பாபா நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து முக்கிய ஐந்து இடங்களில் இருந்து தொடர் ஜோதி ஓட்டமாக சென்று இறுதியில் ஆந்திரா மாநிலத்தில் புட்டபர்த்தி பகுதியில் அமைந்துள்ள சத்திய சாய்பாபா பிறந்த இடத்தில் சங்கமிக்கின்றனர். அதில் ஒரு பகுதியாக நேற்று ஞாயிற்றுகிழமை இந்தியாவின் தென்கோடி பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் ஜோதி ஓட்டமானது ஸ்ரீ சத்ய சாய்பாபா சேவா நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வை கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் எட்வர்ட் பிரைட் கொடி அசைந்து தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து பேரணியானது காந்தி மண்டபம் சமீபத்தில் இருந்து சாலை மார்க்கமாக சுமார் மூன்று கிலோமீட்டர் ஜோதி ஓட்டம் நடைபெற்று இறுதியில் விவேகானந்த கேந்திரா மைதானத்தில் நேற்று முடிவடைந்தது. இதில் கலந்து கொண்ட வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்த ஜோதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சுற்றிச் செல்லும். அடுத்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி புட்டபர்தியில் நிறைவடையும். சுமார் 6,000 கிலோமீட்டர் தூரம் நடைபெறும். இந்த அமைதி ஓட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.



