மக்கள் குறை களையும் கூட்டத்தில் ரூபாய் 12 லட்சம் நலதிட்ட உதவிகள் :- ஆட்சியர் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 48 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய்.12,08,270 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்றுநடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 430 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 23 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய்.1,90,770 மதிப்பில் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்களையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய்.10,17,500 மதிப்பிலான செயற்கை அவயங்களையும் என மொத்தம் 48 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய்.12,08,270 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா, மாவட்ட திட்ட அலுவலர் (முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம்) விஜய் ஆனந்த் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.