சுசீந்திரம்.28
இராஜாக்கமங்கலம் ஒன்றியம் தெங்கம் புதூர் பகுதியில் அரசு பள்ளிக்கூடம் உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இப் பள்ளிக்கூடத்தின் எதிரில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடை ஒன்று உள்ளது. இதில் மது அருந்தும் குடிமகன்களின் நடவடிக்கைகள் பள்ளி மாணவர்கள் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக அமைந்து வருகிறது. எனவே இம் மதுக்கடையை இங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசுப் பள்ளியின் எதிரில் அமைந்துள்ள மதுக்கடையை உடனடியாக இடம் மாற்றம் செய்திட வேண்டும் என அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தெங்கம்புதூர் சந்திப்பில் வைத்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கிளை செயலாளர் எஸ். ஜெபமணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் எஸ்.ற்றி. ராஜ்குமார் தொடக்கி வைத்தார். இதில் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிவகோபன், மிக்கேல் நாயகி, குமரேசன் மற்றும் சுப்பிரமணியம், பவுளி, ராஜகோபால் பெட்ரோணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கையெழுத்து இயக்கத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இறுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் முடித்து வைத்து பேசினார்.



