மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கே.எஸ்.ஓ அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி உட்பட 5 பள்ளிகளில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் குறித்து சமூக தணிக்கை குழுவினர் ஐந்து நாட்கள் ஆய்வு செய்தனர்.தொடர்ந்து தணிக்கை குழுவினர் தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் பள்ளியில் சமையலறையை பார்வையிட்டு உணவுப் பொருட்களின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர். மேலும் மாணவர்களின் வீடுகளுக்குச் நேர்காணல் செய்து பெற்றோர்களிடம் கடந்த 1-ம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் ஆலோசனை நடத்தினர். இறுதி நாளான நேற்று திட்ட செயலாக்கத்தினர் மற்றும் பெற்றோர்களுடன் கருத்து கேட்டு டாக்டர் எம்ஜிஆர் சத்துணவு திட்ட சிறப்பு தணிக்கை கிராமசபா கூட்டம் கே.எஸ்.ஓ அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அபிராமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் அனுசியா சிங்காரவேலன், விஏஓ பேச்சியம்மாள், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு அமைப்பாளர் தையல்நாயகி வரவேற்றார்.இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து சமூக தணிக்கை குழு தலைவர் உமா மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தார். மேலும் கூடுதலாக மாணவர்களுக்கு சத்துணவு வழங்க வேண்டும் , அதே போன்று மாணவர்களுக்கு வழங்கப்படும் தட்டுகளின் எண்ணிக்கையை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட நிலையில் உடனடியாக அவை நிவர்த்தி செய்யப்பட்டது. பின்னர் பெற்றோர்கள் 12 ஆம் வகுப்பு வரை மதிய உணவு திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும். காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும்படி வழிவகை செய்ய வேண்டும் என தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியாக மாணவர்களுக்கு தட்டுகளை மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி வழங்கினார். முடிவில் தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி நன்றி கூறினார் இதேபோல ஸ்ரீ கண்டபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் குத்தாலம் கோமல் பள்ளிகளிலும் சமூக தணிக்கை கிராமசபா நடைபெற்றது. அப்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர் துர்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



