சென்னை, ஜூன் 05
சென்னை தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, வடபழனி, அம்மன் கோவில் தெரு, 130-அ வட்டத்தில் 03.06.2025 அன்று (சிம்ஸ் மருத்துவமனை பின்புறம்) சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில், விளையாட்டு திடல் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா மறுசீரமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி தலைமையில், தியாகராய நகர் மேற்கு பகுதி கழக செயலாளர் கே.ஏழுமலை முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விழாவில், கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநகராட்சி விளையாட்டு திடலை திறந்து வைத்து பார்வையிட்டு, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கி, விளையாட்டுகளையும் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், பொழுதுபோக்கு அம்சங்களுக்கு மட்டுமல்லாது நடை பயிற்சி மேற்கொள்ளவும் – உடல் நலத்தை பேணவும் இந்த விளையாட்டு பூங்காவினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சென்னை தென்மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான த.வேலு, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., திமுக-வின் தியாகராய நகர் தொகுதி பார்வையாளர் ரத்னா லோகேஸ்வரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், வட்டக் கழக செயலாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



