நாகர்கோவில், நவ. 22 –
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் புத்தளம் எல்.எம்.பி.சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமை வகித்தார். மருத்துவ முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து மருத்துவ பரிசோதனை அரங்குகளை பார்வையிட்டும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், செய்தியாளர்களிடையே கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை 9 வட்டாரங்கள் உள்ளது. ஒரு வட்டாரத்திற்கு மூன்று முகாம் என்கின்ற வகையிலும், நாகர்கோவில் மாநகராட்சிக்கு 3 முகாம் என்ற வகையில் ஒட்டுமொத்தமாக 30 இடங்களில் முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட 15 முகாம்களில் கன்னியாகுமரியில் மட்டும் 26729 பேர் முழு உடல் பரிசோதனை செய்து பயன் அடைந்துள்ளார்கள். இன்றைக்கு நடைபெற்ற முகாமில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்திற்கான அட்டைகள் 10 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மட்டும் 331 பேர் மாற்றுத்திறனாளிகள் அட்டைகளை பெற்றுள்ளனர்.
பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் ரூ3.5 கோடி மதிப்பில் தரைத்தளத்துடன் கூடிய 3 தளங்களுடன் கூடிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் ரூ.23.50 கோடி மதிப்பில் கட்டிடம் கட்ட நிதி ஒப்புதல் தந்து, பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. புற்றுநோய் பாதிப்புகளுக்கான தீர்வு கட்டிடமும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த இரு கட்டமைப்புகளும் தமிழ்நாடு முதலமைச்சர் இன்னும் ஒரு மாத காலத்தில் கன்னியாகுமரி மக்களுக்கு அர்பணிக்க உள்ளார்கள்.
மேலும் மாவட்டம் முழுவதும் 15-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள், துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அனைத்து மருத்துவ கட்டமைப்பு பணிகளும் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது என கூறினார்.
தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் 10 பயனாளிகளுக்கும், காசநோய் பாதித்த 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், 11 பயனாளிகளுக்கு கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நல அட்டை 1 நபருக்கும், தையல் இயந்திரம் 1 பயனாளிக்கும், 21 பயனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலிகளும், 3 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு கைபேசிகளும் அமைச்சர் வழங்கினார்.
இந்த முகாமில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் என். சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்), செ. ராஜேஷ் குமார் (கிள்ளியூர்), தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.லியோ டேவிட், முகாம் ஒருங்கிணைப்பாளர், துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



