மார்த்தாண்டம், டிச. 4 –
குமரி மாவட்டத்தில் கடலில் மீன்பிடிக்கும் பைபர் படகுகளுக்கு அரசு மானிய விலை மண்ணெண்ணெய் வழங்கி வருகிறது. இந்த மண்ணெண்ணெயை கள்ளச் சந்தையில் வியாபாரிகள் வாங்கி கேரளாவில் கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை பூத்துறை மீனவ கிராமத்தில் இருந்து மானிய விலையில் வழங்கிய மண்ணெண்ணெய் கேரளாவுக்கு கடத்துவதாக கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து கொல்லங்கோடு சப் இன்ஸ்பெக்டர் பிரபகுமார் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட சொகுசு காரை நீரோடி பகுதியில் வைத்து மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அதில் 55 கேன்களில் சுமார் 2000 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் வாகனத்துடன் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்து காரை ஓட்டி வந்த நித்திரவிளை பகுதியை சேர்ந்த லாலு (31) என்பவரை கைது செய்தனர்.



