சேலம், ஜுன் 1 –
தமிழக அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் நலச் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் குரங்குச்சாவடியில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயாளர் கண்ணையன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சந்திரன், மாவட்ட துணை செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் பழனிசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட தலைமை நிலைய செயலாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் முதல் தீர்மானமாக, தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அவருடன் பதிவியேற்றுள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். பின்னர், எம் சாண்ட், பி சாண்ட், முக்கால் ஜல்லி, சிப்ஸ் ஏற்றிவரும் லாரி, லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மீது வழக்கு போடுவதை கனிமவளத்துறை அமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும்.
கடந்தாண்டு கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீரின் மூலமாக, காவேரி படுகையில் ஆங்காங்கே மணல் தேங்கி உள்ளது. எனவே மணல் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், கட்டிட பணியாளர்கள், செங்கல் சூளை பணியாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.



