சென்னை, அக்டோபர் 15 –
சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய 13 வயது சிறுவனை மரணத்தின் விளிம்பிலிருந்து காப்பாற்றி சாதனை படைத்துள்ளது. இந்த சிறுவனுக்கு நீண்ட நாட்களாக இதயநோய் பாதிப்பு இருந்து வந்தது. நாளடைவில் இதயத்தின் செயல்திறன் குறைந்ததால் கல்லீரலும் வீக்கமடைந்து செயலிழக்கத் தொடங்கியது. சிறுவனின் உயிரை காப்பாற்ற ஒரே வழி இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே என மருத்துவர்கள் முடிவுக்கு வந்தார்கள்.
சிறுவனின் தந்தை ஒரு டிரைவராக பணிபுரிகிறார்; இவ்வளவு பெரும் அறுவைச் சிகிச்சைக்கான செலவுகளை ஏற்க முடியாத நிலையில் இருந்தார். அதனால் சிறுவனைக் காப்பாற்றுவதற்காக எம்.எம்.எம். மருத்துவக் குழு தற்காலிகமாக ரத்த ஓட்டத்தைச் சீராக்க இன்ட்ரா-ஓர்டிக் பலூன் பம்ப் (Intra-aortic Balloon Pump) போன்ற உயர்நிலை இதய சிகிச்சைகளைத் தரலாமா என்று பரிசீலித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை ஆணையத்தில் இருந்து சிறுவனுக்கு இதயம் ஒதுக்கப்பட்டு இலவசமாக வழங்கி பொருத்தப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கான செலவை சமாளிக்க அந்த குடும்பம் தங்களால் இயன்றதை சேகரித்தனர். அதே நேரத்தில் எம்.எம்.எம். மருத்துவமனையின் சமூகப் பணித்துறை ஒரு பெரிய நிதியை அறக்கட்டளையிலிருந்து உதவித் தொகையாக ஏற்பாடு செய்து குடும்பத்தின் பொருளாதார சுமையை குறைத்தது. அறுவைச் சிகிச்சைக்கு பின் சிறுநீரகங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியது அவரது உடல்நிலை குணமடைகிறது என்பதற்கான சிறந்த அறிகுறியாகும்.
டயாலிசிஸ் தேவை இருந்த போதும் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுநீரகங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. வழக்கமாக இத்தகைய நோயாளிகளுக்கு நீண்டகால கண்காணிப்பு தேவைப்படும் நிலையில், இச்சிறுவனின் மீட்சி வேகமாகவும் நம்பிக்கையளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. தற்போது சிறுவன் ஆன்லைன் வழியாக தனது பள்ளிப் படிப்பைத் தொடர்கிறான்.
இச்சாதனையை இதய மாற்று பிரிவு இயக்குநர் டாக்டர் விஜித் கோஷி சேரியன், இதய மற்றும் இதய செயலிழப்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் சி. ஆறுமுகம், மயக்க மருத்துவ நிபுணர் டாக்டர் சண்முக பெருமாள் பரமசிவம், குழந்தைகள் இதய மருத்துவ இயக்குநர் டாக்டர் கே. சிவகுமார் ஆகிய எம்.எம்.எம். மருத்துவமனையின் இதய சிகிச்சை பிரிவு மருத்துவக் குழு செய்ததது என்பது குறிப்பிடத்தக்கது.


