மார்த்தாண்டம், ஜன. 5 –
மார்த்தாண்டம் பகுதியில் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லதுரை சாமுவேல் (73). வனத்துறையில் ரேஞ்சராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீட்டில் கருங்கல் பகுதியை சேர்ந்த பிரேமா (40) என்பவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வேலைக்கு சேர்ந்தார். இதை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் பிரேமா வேலையில் இருந்து நின்று ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு செல்லத்துரை சாமுவேல் பீரோவில் தான் வைத்த நகையை சரிபார்த்தார். அப்போது 40 பவுன் நகைகள் மாயமானது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்லதுரை சாமுவேல் இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் வனத்துறை அலுவலர் வீட்டில் வேலை செய்த பிரேமா மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் கருங்கல் பகுதிக்கு சென்று பிரேமாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது ஓய்வு பெற்ற வன அலுவலர் வீட்டில் வேலை செய்த காலத்தில் 40 பவுன் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார். இதை அடுத்து மார்த்தாண்டம் போலீசார் பிரேமாவை கைது செய்து அவரிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான பிரேமாவை குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தக்கலை பெண்கள் சிறையில் அடைத்தனர்.


