கிருஷ்ணகிரி, நவ. 6 –
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த நாகமங்கலத்தில் டாடா தொழிற்சாலை இயங்குகிறது. இங்கு பணிபுரியும் பெண்கள் தங்குவதற்காக லாளிக்கல் எனும் பகுதியில் டாடா தொழிற்சாலை சார்பில் விடியல் ரெசிடென்சி என விடுதி கடப்பட்டுள்ளது. இங்கு 8 பிளாக்கில் 11 அடுக்குகள் அமைந்துள்ளது. இங்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில் பெண்கள் தங்கி இருந்த குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் இரவு விடுதியில் தங்கியிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனையடுத்து ஓசூர் உதவி ஆட்சியர் அக்ரிதிசேத்தி மற்றும் எஸ்பி தங்கதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பாதுகாப்பிற்காக 100 க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து போலீஸார் விசாரணையில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளி நீலு குமாரி குப்தா (22) என்பவர் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தியது தெரியவந்தது. இதனையடுத்து உத்தனப்பள்ளி போலீஸார் அப்பெண்ணை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பெண்கள் தங்கியிருந்த விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய தகவல் பெற்றோர்களுக்கு தெரிந்ததால் வெளி மாவட்டங்களை சேர்ந்த பெற்றோர்கள் வந்து விடுதியின் முன்பு திரண்டனர். இதனால் மேலும் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து இன்று காலை எஸ்.பி.தங்கதுரை, ஏடிஎஸ்பி சங்கர் தலைமையில் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார் என 200 க்கும் மேற்பட்டோர் விடுதி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதே போல் உதவி ஆட்சியர் மாவட்ட வருவாய்துறை அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் பெண்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த 200 க்கும் மேற்பட்ட பெண்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி சென்று வருகின்றனர். விடுதியில் வேறு எங்கும் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என போலீஸார் 10 குழுவினர் ஒவ்வொரு அறையாக சோதனை செய்து வருகின்றனர்.



