நாகர்கோவில், ஜன. 10 –
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முட்டம் பகுதியில் புனரமைக்கப்பட்ட விழுதுகள் – ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் நலனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்துடன் இணைந்து விழுதுகள் என்ற திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது. விழுதுகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான ஒருங்கிணைந்த சுகாதார மறுவாழ்வு சேவைகளை அவர்களின் இல்லங்களிலும், பிரத்யேக மையங்களிலும் வழங்குவதாகும். மேலும் இது அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கவும், கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கான நலத்திட்டங்களை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் கோட்ட மற்றும் வட்டார வாரியாக அரசு கட்டிடங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் தசைப்பயிற்சியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மனநல ஆலோசகர்கள் மற்றும் பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் மூலமாக அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான பிசியோதெரபி, கண் பார்வை அளவியல், பேச்சுப் பயிற்சி, உளவியல் உள்ளிட்ட சேவைகளை ஒரே இடத்தில் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
அதனடிப்படையில் குருந்தன்கோடு வட்டாரம் முட்டம் பகுதியில் ரூ.14.5 இலட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட விழுதுகள் – ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்ட அளவில் 02 ஒரிடச் சேவை மையங்கள் மற்றும் வட்டார அளவில் 17 ஓரிட சேவை மையங்கள் நிறுவிட அரசு கட்டடங்கள் தேர்வு செய்யப்பட்டு பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்ட ஓரிட சேவை மையங்கள் பிப்ரவரி 2026 முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது என கூறினார்.
நடைபெற்ற ஆய்வில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்திரன், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



