ஈரோடு, ஜூன் 14 –
ஈரோடு மாநகராட்சி பகுதியில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் கடந்த சில நாட்களாக அகற்றி வருகிறார்கள்.
பன்னீர்செல்வம் பார்க் அருகே ஊர்க்காவல் படை அலுவலகம் அருகே தவெக கட்சியின் பிளக்ஸ்போர்டு வைக்கப்பட்டு இருந்தது. இதை மாநகராட்சி ஊழியர்கள் மாநகராட்சி ஊழியர்கள் எந்த சேதாரமும் இல்லாமல் பாதுகாப்பாக கழற்றி சுவரில் சாய்த்து வைத்ததாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் தீயணைப்பு நிலையம் எதிரே அதிமுக சார்பில் சாலை ஓரமாக வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் போர்டை மாநகராட்சி ஊழியர்கள் தூணுடன் உடைத்து அகற்றி சாலையோரத்தில் வைத்தனர். இதனால் அதிமுக பிளக்ஸ் போர்டு சேதம் அடைந்தது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் பெரியார் நகர் மனோகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். தனது கண் முன்பே அதிமுக பெயர் பலகையை சேதப்படுத்தி அகற்றியதை பார்த்த அவர் ஆவேசம் அடைந்தார். இதுபற்றி அவர் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தவெக கட்சி பேனரை சேதம் இல்லாமல் அவிழ்த்து வைக்கிறீர்கள். ஆனால் அதிமுக பேனரை உடைத்து அகற்றுவீர்களா ஏன் பாரபட்சமாக நடந்து கொள்கிறீர்கள் உங்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது என்று கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் டி எஸ் பி முத்து குமார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானப்படுத்தினார். சம்பவ இடத்தில் ஏராளமான அதிமுக வினர் மற்றும் பொது மக்கள் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.



