தருமபுரி, ஜூன் 02 –
தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக மழை பெய்து வருகிறது. தருமபுரி டவுன் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் குமாரசாமிபேட்டை 10, 11 வார்டுகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இந்த மழை நீருடன் கழிவு நீரும் கலந்து தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் காலை வரை மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து குமாரசாமிப்பேட்டையில் தருமபுரி – பென்னாகரம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த நகர காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரியின் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



