நாகர்கோவில், மே 15 –
நாகர்கோவில் நாகராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (60). குழித்துறை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி குடும்பத்தினரிடம் தகராறு செய்வது வழக்கம்.
சமீபத்தில் வீட்டில் தகராறு செய்துவிட்டு நாகர்கோவில் புன்னைநகர் பகுதியில் ஹவுசிங் போர்டு காலனியில் இருக்கும் அவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த இரு நாட்களாக இவர் செல்போனை எடுத்துப் பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மகன் சென்று பார்த்தபோது, முருகன் வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
இது குறித்து ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று முருகனுடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதிக குடிபோதையில் முருகன் இறந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அவரது மனைவி கல்யாணி அளித்த புகாரின் பேரில் ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே முருகன் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும் என போலீசார் கூறினர்.


