தேனி, மே 1 –
தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தமிழ்நாடு–கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி அம்மன் கோயிலில் சித்திரை முழுநிலவு திருவிழா (01.05.2026) வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
அதிகாலை நேரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. பசுமையை குறிக்கும் வகையில் கண்ணகி அம்மனுக்கு பச்சை பட்டாடை சாத்தப்பட்டு, வண்ண மலர்கள் மற்றும் சிறப்பு அலங்காரங்களுடன் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டில் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிறப்பு பேருந்து சேவைகள் இயக்கப்பட்டதுடன், இரு மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தினர்.
உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட பளியன்குடி வழியாக நடைபயணம் மேற்கொண்ட பக்தர்களுக்காக வழியெங்கும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, குளுக்கோஸ், உப்புக்கரைசல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க தேவையான மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட்டது.
மேலும், பக்தர்களுக்கு தேவையான அளவில் சுத்தமான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வாகன நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு இடங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். குமுளி பேருந்து நிலையத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஏராளமான ஆண் மற்றும் பெண் காவலர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும், இரு மாநில வனத்துறையினரும் இணைந்து வனவிலங்குகளால் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இந்த விழா பக்தர்களின் உற்சாக பங்கேற்புடன் சிறப்பாக நிறைவடைந்தது.



