தேனி, ஜூலை 29 –
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (28.07.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவமனை கட்டிட வளாகத்தில் உள்ள தரைத்தளம், முதல்தளம் மற்றும் இரண்டாம் தளம் ஆகியவற்றை பார்வையிட்டு கட்டுமானப் பணிகளின் தன்மைக் குறித்து கேட்டறிந்ததுடன், பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
பின்னர், ஆண்டிபட்டி வைகை அணைக்கட்டு பகுதிக்கு சென்று, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீன்குஞ்சு வளர்ப்பு மையம் செயல்பட்டு வருவதை பார்வையிட்டு, பராமரிப்புகள் குறித்துக் கேட்டறிந்தார்.
மேலும், அப்பகுதியில் அலங்கார மீன் வளர்ப்பு மையம் செயல்பட்டு வருவதை பார்வையிட்டு விற்பனை விவரம் குறித்து கேட்டறிந்ததுடன், மீன்வளத்துறையின் மூலம் நகர்ப்பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் மீன் உணவகத்தை செயல்படுத்தி, பொதுமக்கள் விரும்பும் வகையில் சுவையான மீன் உணவுகளை வழங்கிட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இவ்வாய்வில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துசித்ரா, மீன்வளத்துறை உதவி இயக்குநர் சௌந்திரபாண்டியன், பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) உதவிப்பொறியாளர் விக்னேஷ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.



