குளச்சல், ஜூன் 12 –
மண்டைக்காடு அருகே கோவிலான் விளையை சேர்ந்தவர் ரெதீஷ் (37). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்தது. தற்போது பெர்ஜின் ஜிஜின் என்கிற பத்து மாத ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு தொடர் வயிற்றுப்போக்கு இருந்து வந்தது. இதற்காக குளச்சலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நேற்று குழந்தைக்கு மீண்டும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக மீண்டும் அதே ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென குழந்தையின் நிலை மோசமாகி உள்ளது. உடனடியாக டாக்டர்கள் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவ கல்லூரி கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தை ஏதாவது வைரஸ் தொற்றினால் இறந்ததா? என்பதை உறுதிப்படுத்துவதற்காக ரெதிஷின் வீடு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.


