கன்னியாகுமரி, ஜூலை 27 –
கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் எதிரே உள்ள மாயம்மா கோயில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த கோயில் பூஜாரி முத்துகிருஷ்ணன் பூஜை முடிந்து கோயில் கதவை பூட்டி சென்றார். மறுநாள் முத்துகிருஷ்ணன் கோயிலை திறந்த போது கோவிலில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் மரப்பெட்டியில் இருந்த வெள்ளி பூஜை பொருட்கள், நான்கு வெள்ளிக்கவசம், 100க்கும் மேற்பட்ட வெள்ளி நாணயங்கள், வெள்ளி கவசம் பொருத்தப்பட்ட வலம்புரி சங்கு, வெள்ளி கொலுசுகள் என மொத்தம் ஒன்றேகால் கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் திருடப்பட்டுள்ளது.
இது குறித்து முத்துகிருஷ்ணன் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி டிஎஸ்பி பிரகாஷ் மேற்பார்வையில் சப். இன்ஸ்பக்டர் வினிஷ்பாபு தலைமையிலான போலீசார் கொள்ளையனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அதில் கொள்ளை அடித்த பொருட்களுடன் கொள்ளையன் கன்னியாகுமரி பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் மார்த்தாண்டம் சென்றுள்ளான். அங்கு ஒரு தனியார் விடுதியில் 2 நாட்கள் தங்கி இருந்துள்ளான். பின்னர் நேற்று குழித்துறைை ரயில் நிலையம் சென்ற கொள்ளையனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் கன்னியாகுமரி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்த போது மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஆசிஸ் சர்க்கார் (29) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கோவிலில் கொள்ளையடித்த பொருட்களை பறிமுதல் செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.



