விளாத்திகுளம், நவம்பர் 27 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தலைக்காட்டுபுரம் கிராமத்தில் விவசாயத்திற்குரிய நீரோடையை ஆக்கிரமிப்பு செய்து, முறையாக அனுமதி பெறாமல் நீர் வழித்தடத்தில் JSW என்ற தனியார் காற்றாலை நிறுவனத்தின் சார்பில் புதிய உயர்மின்கம்பங்களை அமைத்து அதன் வழியாக மின் வழித்தடம் அமைப்பதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த எட்டையபுரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வருவாய்த் துறையினர் மூலம் நீரோடை பகுதிகள் முறையாக அளவிடப்பட்டப்பின்னர் புதிய மின்கம்பம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



