நாகர்கோவில், அக். 27 –
நாகர்கோவில் பார்வதிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை தற்போது அதிமுக சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை சிலையின் வலது கை பக்கம் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அப்பகுதியினர் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமானவர்கள் அங்கு திரண்டனர்.
நாகர்கோவில் ஏஎஸ்பி லலித்குமார் மற்றும் ஆசாரிப்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிலை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரி சிலைக்கு முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஏஎஸ்பி லலித்குமார் உறுதி அளித்தார். இதையடுத்து அதிமுகவினர் கலைந்து சென்றனர்.
தற்போது இது சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் பச்சைமால் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். திருவனந்தபுரம் – கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள சிலையை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கூறுகையில்: சிலை உடைத்த விஷமிகளை உடனடியாக காவல்துறை கண்டுபிடித்த கைது செய்ய வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி பெற்று இந்த சிலை மாற்றப்பட்டு புதிய சிலையை நிறுவப்படும் என்று கூறினார்.



