தருமபுரி, ஜனவரி 20 –
தருமபுரி மாவட்டம், அரூர் உழவர் சந்தையில், பாலாறு வேளாண் கல்லூரி (Palar Agricultural College) மாணவர்கள் விவசாயிகளுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். தங்களின் ஊரக வேளாண் பணி அனுபவப் பாடத்தின் (RAWE) ஒரு பகுதியாக இங்கு முகாமிட்டுள்ள மாணவர்கள், உழைப்பாளர் திருநாளாம் பொங்கல் விழாவை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது, மாணவர்கள் விவசாயிகளிடம் விளைபொருட்களின் தற்போதைய சந்தை விலை மற்றும் விற்பனை வாய்ப்புகள் குறித்துக் கேட்டறிந்தனர். பின்னர், விவசாயிகளின் சந்தேகங்களுக்குப் பதிலளித்த மாணவர்கள், ரசாயன உரங்களுக்கு மாற்றாக பஞ்சகவ்யா, வேப்பம் புண்ணாக்கு மற்றும் உயிர் உரங்களைப் பயன்படுத்துவதன் நன்மைகளை விளக்கினர்.
மேலும், விளைபொருட்களைத் தரம் பிரித்து விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபம் ஈட்டுவது குறித்தும், பூச்சி மேலாண்மைக்கான எளிய இயற்கை முறைகள் குறித்தும் மாணவர்களால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



