நாகர்கோவில், மார்ச் 20 –
விவசாயிகள் சங்கம் மற்றும் நீர் பாசன சங்கம் முன்னெடுத்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில நிர்வாகியும், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான மரிய ஜெனிபர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கூறியதாவது: குமரியின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தரமற்று அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாத நிலையில் இருப்பதைப்பற்றி நாம் தொடர்ந்து பேசி வந்திருக்கிறோம்.
நமது நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக தேக்கி வைக்க சரியான அறைகள் இல்லை. வெட்ட வெளியில் தார்ப்பாய்கள் மூலம் நெல் மூட்டைகள் மூடி வைக்கப்படுகிறது.
ஒரு நெல் கொள்முதல் நிலையத்தில் கூட நெல் உலர்த்தும் கருவி இல்லை. இதனால் இயற்கையாகவே ஈரப்பதம் மிக்க குமரி மாவட்டத்தில் நம் விவசாயிகளால் அரசு நிர்ணயிக்கும் ஈரப்பத அளவில் (17%) நெல்களை கொடுக்க முடிவதில்லை.
இந்நிலையில் குமரியில் கடந்த மூன்று நான்கு நாட்களாக பெய்துவரும் மழையால் நெல் மூட்டைகள் நனைந்துபோயிருக்கிறது. இதனால் நெல்லின் ஈரப்பத அளவு அதிகரித்திருக்கிறது.
இதனால் கொள்முதல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விவசாயிகளே தங்கள் நெல்லை உலரவைத்து தரவேண்டும் என உத்தரவிட்டிருக்கின்றனர். சரியான மேற்கூரையும் இல்லாத, நெல் உலர்த்தும் கருவியும் இல்லாத நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளே நனைந்த தங்கள் நெல் மூட்டைகளை வெட்டவெளியில் பரப்பி உலர்த்தவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் நெல் வியாபாரிகள் தங்கள் நெல்லை கொள்முதல் நிலையங்களிலே கொட்டி வைப்பதால் விவசாயிகளுக்கு நெல்லை உலர்த்துவதற்கான இடவசதிகள் கிடைப்பதில்லை. விவசாயிகள் தங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து தான் அப்பகுதியில் நெல் உலர்த்தும் இடங்களை பெறமுடியும் என்ற நிலையில் வியாபாரிகளை அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு எவ்வித முறையான ஆவணங்களும் இல்லாமல் அனுமதிப்பதால் விவசாயிகளுக்கு சரியான இடம் இல்லாமல் சாலைகளில் நெல்லை உலர்த்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் விவசாயிகள் ஒப்புதல் சீட்டு பெற வேண்டுமெனில் குறிப்பிட்ட உரங்களை வாங்கியாக வேண்டும் என்ற நிர்பந்தமும் அதிகாரிகளிடமிந்து தரப்படுகிறது.
நெல் மூட்டைகளை மழையிலிருந்து பாதுகாக்க வேண்டிய கொள்முதல் நிலையமும் அதன் அதிகாரிகளும், தாங்கள் செய்யவேண்டிய வேலையையும் பொறுப்பையும் விவசாயிகளின் தலைமேல் ஏற்றிவைப்பது அலட்சியமான நிர்வாக செயல்திறனற்ற நிலையை காட்டுகிறது.
கொள்முதல் நிலையத்தில் முறையான கூரைகொண்ட கட்டமைப்பு செய்யப்பட்டிருந்தால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்திருக்காது. கொள்முதல் நிலையங்களில் நெல் உலர்த்தும் கருவி இருந்திருந்தால் நெல்லின் ஈரப்பதத்தை எளிதில் குறைத்திருக்க முடியும். இந்த எளிய தீர்வுகளான இரண்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்காமல் விவசாயிகளை நிர்பந்தப்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அரசின் இந்த விவசாயிகளுக்கு விரோதமான போக்கை கண்டித்து குமரியின் விவசாயிகள் போராட்டக்களத்தில் நிற்கின்றனர். இந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தொடர்ந்து களத்தில் தோளோடு தோளாக நின்று ஆதரவளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.



