தருமபுரி, ஜூலை 18 –
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.52 ஆயிரம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்சப் புகார்கள் மற்றும் கணக்கில் வராத பணப் பரிவர்த்தனைகளைத் தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக பத்திரப்பதிவு அலுவலகங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அரசு அலுவலகங்களில் திடீர் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை சுமார் 4 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையில், ஆய்வாளர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டது. அந்த நேரத்தில், புதிதாக பொறுப்பேற்ற கோட்டாட்சியர் ஜார்ஜ் தலைமையில் அமைதிக்குழு (Peace Committee) கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து பொதுமக்களை வெளியே அனுப்பிவிட்டு சோதனையைத் தொடங்கினர்.
பின்னர், வட்டாட்சியர் பிரசன்ன மூர்த்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அலுவலக ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அலுவலகத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்ட நிலையில் ஆவணங்கள், பணப் பதிவேடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. இந்த சோதனையின் போது, கணக்கில் வராத ரூ.52 ஆயிரம் ரொக்கம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அதிரடி சோதனை, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



