தருமபுரி, ஜூன் 29 –
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி நேரில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு, மனநலப் பிரிவு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளை பார்வையிட்டார். மேலும், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவ சேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மனோகரன் மற்றும் மருத்துவர்களுடன் கலந்துரையாடி, மருத்துவமனையின் தற்போதைய செயல்பாடுகள், தேவைகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.
அப்போது சௌமியா அன்புமணி பேசியதாவது: தருமபுரி மாவட்டம் சிறிய மாவட்டமாக இருந்தாலும், ஔவைக்கு நெல்லிக்கனி வழங்கிய அதியமான் மூலம் வரலாற்றில் தனித்த அடையாளம் பெற்ற மாவட்டமாகும். அதேபோன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிகளவில் உடல் உறுப்பு தானங்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. இது மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாகும்.
மருத்துவ சேவையை மேலும் மேம்படுத்தி, தரமான சிகிச்சை வசதிகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகளை மேலும் உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். இந்த ஆய்வின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன், மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.



