மார்த்தாண்டம், மார்ச் 7 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களில் 2வது சிவாலயமான ரிஷப ராசி பரிகார ஸ்தலமான திக்குறிச்சி மஹா தேவர் கோயில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் அருகே திக்குறிச்சி பயணம் பால பணிகள் நடைபெற்ற போது ஏற்பட்ட நீரோட்ட மாற்றத்தால் கோயில் சுற்று சுவரோடு சேர்த்து இருந்த மண் திட்டு ஆற்று வெள்ள பெருக்கில் இழுத்து சென்றது. இதனால் கோயில் சுற்று சுவர் அந்தரத்தில் தொங்கியதால் பக்தர்கள் சுவர் பாதுகாப்பிற்காக பெரிய பாரங்கற்களை கொட்டினர். அந்த கற்களையும் ஆற்று வெள்ள பெருக்கு இழுத்து சென்றது. இதனால் இந்த பகுதியில் கோயில் சுவர் மற்றும் கோயில் பாதுகாப்பிற்காக பக்க சுவர் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு மற்றும் அமைச்சர் மனோதங்கராஜ் அன்றைய விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலில் நிதியில் இருந்து 84 லட்சம் ரூபாய் பக்கச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து பொது பணி துறை க்கு ஒதுக்கீடு செய்தனர். ஆனால் 3 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் இழுத்தடிப்பு செய்த காரணத்தால் பக்தர்கள் மற்றும் இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உட்பட அமைப்பினர் பல கட்ட போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பக்கச்சுவர் அமைக்க தாமிரபரணி ஆற்றில் தடுப்பு சுவர் (வண்டு) அமைக்க மண் போட்டு நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்காக குழித்துறை சப்பாத்து பாலத்தில் ஆற்று தண்ணீரும் திறந்து விடப்பட்டது. ஆனால் கடந்த 2 தினங்களாக கனிம வளம் மண் தட்டுபாடு என்று கூறி பணிகளை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மீண்டும் பக்கச்சுவர் அமைக்க தாமதம் ஏற்பட்டு உள்ளது. இது போன்று இந்த பணிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட காரணமாக பாகோடு பேருராட்சி, வெள்ளாங்கோடு ஊராட்சி மற்றும் குழித்துறை நகராட்சி பகுதிகளுக்கு சொந்தமான தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை நீர் கிணறுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இப்படி பல சிரமங்களுக்கு உள்ளாகி நடந்து வரும் இந்த பணிகளை மண் தட்டுப்பாடை காட்டி கிடப்பில் போடாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை காலம் துவங்கும் முன் இந்த பணிகள் முடிவடைந்தால் மட்டுமே பக்கச்சுவர் அமைக்கும் பணிகளை முழுமையடைய செய்ய முடியும் என்ற இலக்கோடு கோயில் சுற்று சுவர் இடிந்து கோயிலை பாதிக்கும் முன் பணிகளை உடனே துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



