தருமபுரி, ஜூன் 9 –
தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சுதா, ஒருங்கிணைப்போடு ‘உலக உணவு பாதுகாப்பு தின விழா’ நடைபெற்றது.
தருமபுரி மற்றும் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்பு முன் உரையுடன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முருகன் , பட்டதாரி ஆசிரியை கிரிஜா , இசை ஆசிரியை சாய் விஜயலட்சுமிஆகியோர் முன்னிலையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். கைலாஷ்குமார் தலைமையில் “உலக உணவு பாதுகாப்பு தினம் 7 ஜுன் 2026” விழிப்புணர்வு அனுசரிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் ஏழாம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினமாக ஒரு கருப்பொருளுடன் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டும் “சுமையிலிருந்து தீர்வு வரை எங்கும் பாதுகாப்பான உணவு” அதாவது “From burdon to solutions -safe food everywhere” என்ற கருப்பொருள் உடன் உலக உணவு பாதுகாப்பு தின விழா அனுசரிக்கப்படுகிறது.
மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ் குமார் , தலைமை உரையில் பாதுகாப்பற்ற உணவுகளை உண்பதால் உலக சுகாதார நிறுவன (World Health Organization)கூற்றின்படி உலக அளவில் ஆண்டுதோறும் 86.6 கோடி பேர் உடல்நலம் குறைவால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 1.5 லட்சம்பேர் ஆண்டு தோறும் உயிரிழப்பை எதிர் நோக்குகின்றனர். ஆகவே நாம் பாதுகாப்பான உணவவை உறுதி செய்ய ஐந்து விஷயங்களை (5C – Cleaning, Cooking ,Chilling, Cross contamination prevented and Communication) முக்கியமாக பின்பற்ற வேண்டும் என இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் வலியுறுத்துகின்றது.
அவை தன் சுத்தம், சமையலறை மற்றும் சுற்றுப்புறசுத்தம், பாதுகாப்பான உணவிற்கான அனைத்து வழிகளை பின்பற்றுதல், உணவை உட்கொள்ளும் முன் அது கலப்படம் இல்லாமலும் கெட்டுப் போகாமல் இருப்பதை உறுதி செய்தல் மேலும் நீங்கள் உண்ணும் உணவை பற்றிய தகவல்களை விபரச்சீட்டில் இருந்து அறிந்து கொள்ளுதல் ஆகியவை முக்கியமான ஐந்து தூண்கள் ஆகும். இவற்றை கடைபிடித்தாலே உடல் நல்ல ஆரோக்கியத்துடன் பாதுகாப்பான முறையில் வாழலாம் எனவும் தற்சமயம் அறிவியல் பூர்வமான வகையில் உணவுப் பொருட்களை ஆராய்ந்து பாதுகாப்பான உணவை தேர்ந்தெடுத்து உடல் நலத்தை பேணி காக்கலாம் என விழிப்புணர்வு செய்தார்.
மேலும் நிகழ்வில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பொட்டலம் இடப்பட்ட உணவுப் பொருட்களின் லேபிள்களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து அதாவது உணவு பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, நுகர்வோர் தொடர்பு எண், உணவு பாதுகாப்பு உரிமை எண் மேலும் சைவ , அசைவ குறியீடுகள் உணவு பொருள் உட்காரணிகள், அலர்ஜி தன்மை, ஊட்டச்சத்து தகவல்கள் குறித்து உரிய பொருட்களுடன் நேரடி செயல் விளக்கம் அளித்ததுடன் உணவுப் பொருட்கள் சிலவற்றின் வீட்டு அளவிலேயே கலப்படம் கண்டறிந்தல் குறித்து குறிப்பாக தேயிலை, தேன், சமையல் எண்ணெய், நெய், மஞ்சள் தூள், மிளகு, வெல்லம், செர்ரிபழம் உள்ளிட்டவற்றில் கலப்படம் கண்டறிதல் குறித்து உணவு பொருட்களை கொண்டு நேரடி செயல் விளக்கம் அளித்தார்.
விரைவாக உணவு பாதுகாப்பு சார்ந்து சுகாதாரம் தரம் கட்டுப்பாடு மற்றும் வீண் விரயம் தவிர்த்தல் உணவு பாதுகாப்பு அவசியம் குறித்து மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பேன் என 800 க்கும் மேற்பட்ட மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்வில் பள்ளி உயர்கல்வி இயக்குனர் தங்கரத்தினம் ஆசிரியை அருள்செல்வி உள்ளிட்டோருடன் இருபால் ஆசிரியை, ஆசிரியர்களுடன் மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.



