நாகர்கோவில், மார். 21 –
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுவதையொட்டி 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் வாக்குரிமை பெற்ற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வடசேரி பேருந்து நிலையத்தில் மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் அதிகமானோர் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே ஏற்படுத்தப்பட்டது.
தேர்தல் நடைபெறும் நாளான 23.04.2026 அன்று வரை “தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா” என்பதை வலியுறுத்தி மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் ரங்கோலி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் வாக்காளர் உறுதிமொழியினை சுயஉதவிக்குழுவினர், அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பத்ஹீ முகம்மது நசீர், உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல்குமார், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட இயக்குநர், மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்கள் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.



