நாகர்கோவில் பிப் 13
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில், தோவாளை வட்டத்திற்குட்பட்ட தடிக்காரண்கோணம் கிறிஸ்தவ நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா கலந்துகொண்டு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பேசுகையில்:-
தமிழ்நாடு அரசு பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாவட்டத்திற்குட்பட்ட ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடத்தி பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியான பயனாளிகளுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வெள்ளங்கோடு அரசு உயர்நிலைப்பள்ளி தடிக்காரண்கோணம் கிறிஸ்தவ நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பட்டா வழங்குதல், பட்டா பெயர் மாற்றம் செய்தல், விதவை சான்றிதழ். முதிர்கன்னி ஓய்வூதியத்தொகை, ஆதரவற்றோர் விதவை சான்றிதழ். குடும்ப அட்டை, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வதே ஆகும். வீடு தொடர்பான மனுக்களுக்கு மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு மானியத்துடன் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். இம்முகாமின் நோக்கம். அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதேயாகும். இத்திட்டத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படுகிறது. எனவே பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெற உரிய துறைகளுக்கு விண்ணப்பித்து, பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 51 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2024-25 திட்டத்தின் கீழ் வணிக ரீதியிலான பலா கன்றுகள் 2 பயனாளிகளுக்கும். கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு தாது உப்புக்கள் கலவை மற்றும் புல் கருணைகள் தொகுப்பு வழங்கினார்.
இதில் வருவாய் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.