தென்தாமரைகுளம்., பிப். 14.புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமூகப்பணித்துறை மற்றும் மார்த்தாண்டம் ஒருங்கிணைந்த வளர்ச்சி சங்கம் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அருட்தந்தை ஏசுதாஸ் தலைமை தாங்கி, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மருத்துவர் திலிப் குமார் புற்றுநோயின் தாக்கங்கள், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய தகவல்களை விளக்கினார். இதையடுத்து, கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பேரணியாக சென்று புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் 45க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். மேலும், நிதி திரட்டும் முயற்சியாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தொகுப்பாக நிதி திரட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி சார்பில் பேராசிரியர் ஆட்லின் ஜெபா கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியை கல்லூரியின் முதுகலை சமூகப்பணித்துறை முதலாமாண்டு மாணவன் ஆதிஷ் ராம் ஒருங்கிணைத்திருந்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.



