ஊட்டி. ஜன. 04.
தெய்வீக சக்தி வாய்ந்த அரிய வகை மூலிகை மரமான ருத்ராட்சை மரங்களில் காய்கள் காய்க்க தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நம் நாட்டு மூலிகை மரங்கள் உட்பட வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பலவகையான மரங்களை குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடவு செய்யப்பட்டது. இமயமலை, நேபாளம் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காய்க்கக்கூடிய ருத்ராட்சம் மரங்கள் 1905 ஆம் ஆண்டில் நேபாளத்திலிருந்து கொண்டு வரப்பட்டு குன்னூரில் நடவு செய்யப்பட்டது அதேபோல் மற்றொரு மரம் 1945 ஆம் ஆண்டு நடவு செய்யப்பட்டதாகும். நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் மர பூங்காவில் நடவு செய்யப்பட்ட இந்த இரண்டு மரங்களும் இன்றுவரை பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் பூக்க தொடங்கிய மரங்கள் டிசம்பர் கடைசி வாரத்தில் இருந்து காய்கள் காய்த்து பழமாகும். ஜனவரி மாதம் முடிய ருத்ராட்சம் மர சீசன் ஆகும் ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சை காய்கள் தற்பொழுது காய்த்து குலுங்க தொடங்கியுள்ளது. தற்போது குன்னூரில் காய்த்துள்ள அரிய வகை ருத்ராட்சை மரத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து செல்வதோடு கீழே உதிரும் ருத்திராட்சை கொட்டைகளை எடுத்து செல்கின்றனர். தெய்வீகத்துக்கும், அரிய மூலிகை மருத்துவத்திற்கும் பயன்படும் ருத்ராட்சை மரத்தை தொடர்ந்து அரசு பாதுகாத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.