குளச்சல், ஜூன் 24 –
மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது 13 வயது மகளுடன் நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில் உள்ள கோயில் திருவிழாவை காண நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் சிறுமிக்கு தூக்கம் வருவதாக கூறியதால் அவளை மட்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார். பின்னர் வீட்டில் சிறுமியை தூங்க வைத்துவிட்டு தாய் கோவிலுக்குப் புறப்பட்டார். அப்போது அவசரகதியில் அந்த பெண் கதவை வெளிப்பக்கம் பூட்டாமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. அந்த சமயம் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 52 வயது நபர் போதையில் அங்கு நின்று கொண்டு இருந்தார். தான் வீட்டை பூட்டாமல் வந்ததையும் பக்கத்து வீட்டு நபர் போதையில் நின்றதை உணர்ந்த பெண் உடனடியாக வீட்டிற்குத் திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. பக்கத்து வீட்டு நபர் வீட்டுக்குள் நுழைந்து உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கதவை திறக்குமாறு சத்தம் போட்டார். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. உடனே அந்தப் பெண் சுதாரித்துக் கொண்டு 100 அவசர எண்ணுக்கு போன் செய்தார். அதன் பேரில் இரவு நேர ரோந்து போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று போலீஸ் வந்து இருப்பதாக கூறி கதவு தட்டினர். அந்த நேரம் கதவைத் திறந்து தப்பி ஓட முயன்ற போதையாசாமியை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் போதையில் இருந்த அவர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து 13 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.