ஈரோடு, செப். 7:
பெருந்துறை முதல் சென்னிமலை அத்திக்காடு வரையிலான நான்கு வழிச்சாலை பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்கி, குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 2026–27-ன் கீழ் ₹65.50 கோடி மதிப்பீட்டில், பெருந்துறை பழைய பேருந்து நிலையம் முதல் சென்னிமலை அத்திக்காடு வரையிலான இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி தொடங்கின.
இதற்காகச் சாலையின் இருபுறங்களிலும் பள்ளங்கள் தோண்டப்பட்டதுடன், பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வந்தன. இந்நிலையில், பணிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தினசரி இச்சாலையைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
சாலையோரங்களில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் மற்றும் பாதியில் நிறுத்தப்பட்ட பணிகளால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஒப்பந்ததாரர் பணிகளை நிறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், முக்கிய மாநில நெடுஞ்சாலைப் பணி நீண்டகாலம் முடங்குவது பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட்டு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரருடன் ஆலோசித்து பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலையோரப் பள்ளங்கள் மற்றும் அபாயகரமான பகுதிகளில் பாதுகாப்புத் தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் மற்றும் இரவு நேரப் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, பணிகளின் முன்னேற்றத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனத் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் வலியுறுத்தியுள்ளார்.



