மார்த்தாண்டம், மார். 9 –
முளங்குழி அரசு தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கருங்கல் வட்டாரக் கல்வி அலுவலர் எம். மஞ்சு தலைமை வகித்தார். ஆசிரியர் மு. மேரி லிட்டில் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்த ஆண்டறிக்கையைத் தலைமையாசிரியர் சைனி சமர்ப்பித்தார்.
குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் மாணவர்களின் அறிவியல் ஆர்வம் மற்றும் கல்வி வளர்ச்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். விழாவில் கிள்ளியூர் வட்டார வளமையம் கணக்காளர் பெனிலா, கிள்ளியூர் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பென்னட், கிராமக் கல்விக்குழ தலைவர் ராதாகிருஷ்ணன் வாழ்த்தி பேசினர்.
விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக, ‘நீதியை நிலைநாட்டிய சிலம்பு’ என்ற வரலாற்று நாடகம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வின் நிறைவாக ஆசிரியர் ஹெலன் பென்சி நன்றியுரை ஆற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளைப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் இணைந்து செய்திருந்தனர்.



