ஈரோடு, ஜூலை 2 –
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், இளைஞர்களுக்கு இந்திய நாடாளுமன்ற நடைமுறைகள், சட்டங்கள் இயற்றப்படும் விதம் மற்றும் ஜனநாயகத்தின் செயல்பாடுகள் குறித்து நேரடி அனுபவம் வழங்கும் வகையில், “யங் இந்தியன்ஸ் பார்லிமெண்ட் -2026” என்ற இரண்டு நாட்கள் மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் நடந்தது.
அப்போது அவர் பேசியதாவது: ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளை இளம் தலைமுறையினர் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் சட்டமியற்றும் செயல்முறைகள் குறித்து நடைமுறை அறிவை இளைஞர்கள் பெறுவதற்கும் இதுபோன்ற மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. மேலும், மாணவர்கள் தங்களது கருத்துகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்தி, தலைமைத்துவத் திறன், விவாதத் திறன். பொறுப்புணர்வு மற்றும் சமூக அக்கறையை வளர்த்துக்கொள்ளவும் இந்த நிகழ்ச்சி சிறந்த தளமாக அமைகிறது.
மாணவ, மாணவியர்கள் பாடப்புத்தகங்களை மட்டுமின்றி, வாழ்விற்கு வழிகாட்டும் நூல்களையும் தொடர்ந்து படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்தத் துறையில் பணியாற்றினாலும், வாழ்க்கை நெறிகளை உணர்த்தும் திருக்குறளும், ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புகளை விளக்கும் நூல்களும் இளைஞர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். திருக்குறள் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும். சமுதாயத்தில் எவ்வாறு ஒற்றுமையுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும். வாழ்க்கையில் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இலக்கு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பவற்றை உணர்ந்தக் கூடிய நூலாக திருக்குறள் அமைகிறது.
அதேபோன்று, இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து நாம் ஒவ்வொரு வரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், பிரச்சினைகளை அணுகும் விதம். மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்கள். பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து வயது வரம்பின்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். எனவே, இளைஞர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது அறிவுத்திறனை மேம்படுத்தி, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ஆனந்த் மோகன் எம் எல் ஏ, இந்திய தொழிலக கூட்டமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி, யு.ஆர்.சி.தேவராஜன், தலைவர் யங் இந்தியன்ஸ் நாடாளுமன்றம் (ஈரோடு தலைவர்) ஓம்சரவணா மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



