நாகர்கோவில், அக்டோர் 30 –
நாகர்கோவில் மாநகராட்சியில் சில பகுதிகளில் தெருக்கள் சாலையோரங்களில் ஆடு, மாடு, பன்றிகள் திறந்தவெளியில் வெட்டப்பட்டு வருவதாக புகார்கள் இருந்து வருகின்றன. மேலும் சிறிய கன்றுகள் விபத்தில் மற்றும் நோய்வாய்ப்பட்டு இறந்து போன, ஆடு, மாடுகளையும் விற்பனை செய்து வருவதாகவும் சுகாதாரமற்ற முறையில் கடைகள் உள்ளதாக நாகர்கோவில் மாநகராட்சிக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன.
இதனை எடுத்து நேற்று, மேயர் மகேஷ் தலைமையில், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில், மாநகர் நல அலுவலர் ஆல்பர் மதியரசு இறைச்சி கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து வகை இறைச்சி கடைகளும் மாநகராட்சியில் அனுமதி பெற்று கடைகள் நடத்த வேண்டும். நோய்வாய்ப்பட்ட மற்றும் விபத்தில் இறந்த ஆடு, மாடுகளை வெட்டி விற்பனை செய்யக்கூடாது. கடைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும், பெரு நகரங்கள் போல் மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் ஆடு, மாடுகளை வெட்ட வதைக்கூடம் அமைக்கவும், முதல் கட்டமாக ஏற்கனவே ஆடு அடிக்கும் கூடம் செயல்பட்டு வந்து தற்போது மூடி கிடக்கும் வடக்கு மண்டலத்தை சேர்ந்த கிருஷ்ணன் கோவில், மற்றும் கிழக்கு மண்டலத்தில் உள்ள இளங்கடையில் உள்ள ஆடு, மாடு அடிக்கும் கூடங்களை நவீன முறையில் சீரமைத்து நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. காலை மற்றும் மாலையில் 4 மணி முதல் 8 மணி வரை இங்கு கால்நடை மருத்துவர்கள் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மேயர் மகேஷ் கூறுகையில், (இன்று 30ம் தேதி) முதல் மாநகராட்சி ஆடு மற்றும் மாட்டு இறைச்சி கடை உரிமையாளர்கள் இந்த வதைக்கூடங்களில் மட்டுமே ஆடு மாடுகளை வெட்டி சீல் வைத்து விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டும். தவறினால் பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேயர் மகேஷ் எச்சரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து அனைத்து இறைச்சி கடைகளுக்கும், மாநகராட்சி மாநகர் நலத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் நேரில் சென்று கூடங்களில் வெட்டி மாநகராட்சி சீல் வைத்தால் மட்டுமே விற்பனை செய்ய முடியும். தவறினால் சீல் இல்லாத இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன் பின்னரும் தொடர்ந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர் நல அலுவலர் கூறினார்.



