தென்காசி, அக்டோபர் 29 –
தென்காசியில் தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வந்த தமிழக முதல்வர், 2 லட்சத்து 44 ஆயிரத்து 469 பயனாளிகளுக்கு 1020 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார். குறிப்பாக, சுமார் 155.34 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகள் மற்றும் 290.60 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், 131.54 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை துவங்கி வைத்தார்.
தொடர்ந்து விழாவில் முதல்வர் பேசியதாவது: எழில் கொஞ்சும் உச்சம் தலையை போல் உள்ளங்களை குளிர்விக்கும் இந்த மண்ணில் வடக்கே உள்ள காசி போல், தெற்கே இந்த தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலிற்கு குடமுழக்கு நடத்தியது தி.மு.க அரசு. மாவீரர்கள் பூலித்தேவன் மற்றும் ஒண்டிவீரன் ஆகிய தியாகிகள் வாழ்ந்த இந்த மண்ணில் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் வருவாய் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
குறிப்பாக 10.76,243 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவும், 9 லட்சம் பேருக்கு முதியோர் உதவி தொகை என பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளார். மேலும் தென்காசி மாவட்டத்திற்கு தேவையான 10 புதிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் வெளியிட்டார். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ரூ.15 கோடியில் புதிய குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்படும், ரூ.52 கோடி மதிப்பீட்டில் சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், குருக்கள் பட்டி பகுதியில் குடிநீர் திட்டம் தொடங்கப்படும்.
ரூ .2 கோடி மதிப்பீட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மையம் தொடங்கப்படும், ரூ.6 கோடி செலவில் கடையம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் கட்டப்படும், சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி பகுதியில் ரூ.12 கோடி செலவில் கண்மாயிக்கள் தூர்வாரப்படும். கடனாநதியானது ரூ.4 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு செய்யப்படும், கடையநல்லூர் வரட்டாற்றில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு செய்யப்படும், அடவிநயினார் கோவில் நீர்தேக்கத்தின் மூலம் பாசன வசதி பெறும் கால்வாயிக்கள் தூர்வாரப்படும்., வி.கே.புதூர், மாறாந்தை உள்ளிட்ட பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கால்வாய்க்கள் சீரமைக்கப்படும், ஆலங்குளம் அரசு கல்லூரியில் 1 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்.
அதேபோல் விவசாயிகள் விளைவித்த நெல் பயிர்களை நேரடியாக அரசே கொள்முதல் செய்ய தேவையான நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு ஞாயிற்று கிழமையும் செயல்பட்டு தீவிரமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. என்னவென்றே தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகிறார். அவரிடம் பொய்யையும் துரோகத்தையும் மட்டுமே எதிர்பார்க்க முடியும் என பேசினார்.
சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் என்பது வாக்குரிமையை பறிக்கும் முயற்சி. அதனால்தான் தாம் அதனை எதிர்க்கிறோம். இது தொடர்பாக நவம்பர் 2-ம் தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் கூட்டப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், வனம் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், சார் ஆட்சியர் வைஷ்ணவி பால், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.



