திருப்புவனம், டிசம்பர் 18 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் அம்மன் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.
இந்த பணியை கோயிலின் சிறப்பு அலுவலர் ஞானசேகரன் தலைமையில் கோயில் நிர்வாக அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அலுவலர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் முறையாக கணக்கெடுக்கப்பட்டன.
அதன்படி, கோயிலில் உள்ள ஒன்பது நிரந்தர உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ₹36,65,464 ரொக்கம், 240 கிராம் தங்கம் மற்றும் 312 கிராம் வெள்ளி கிடைத்தது. மேலும், கோயில் வளாகத்தில் செயல்பட்டு வரும் கோசாலையில் அமைக்கப்பட்டிருந்த ஒரு உண்டியலில் இருந்து ₹73,015 ரொக்கம் பெறப்பட்டது.
மேலும் இந்த பணியின் போது, ஒரு பக்தர் தனது எல்ஐசி எல்ஐசி பணம் ரூ.2 லட்சம் கிடைக்க வேண்டுமெனக் கோரி, அதனைப் பற்றிய கோரிக்கையை ஒரு காகிதத்தில் எழுதி உண்டியலில் செலுத்தியிருந்ததும் கண்டறியப்பட்டது.
இந்த காணிக்கைகள் அனைத்தும் அரசு விதிமுறைகளின்படி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பாதுகாப்புடன் கோயில் நிர்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



